கலாபக் கனவுகள் - ஒரு நிமிடக்கதை
July 23rd, 2008 Posted in Uncategorizedகலாபக் கனவுகள் - ஒரு நிமிடக்கதை
தீபாவளி சமயம் ஆதலால் எங்க மொத்த லேடிஸ் ஹாஸ்டலும் காலியாகி இருந்தது. என்னோட ரூம்மேட் ரம்யாவும் ஊருக்குப் போய்விட்டாள். ஆன்லைனிலும் யாரையும் காணவில்லை. ரொம்ப போரடித்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைல் எஃப்.எம்மை ஆன் செய்தேன். ஏதோ ஒரு அலைவரிசையில் கலாபக்கனவுகள் என ஒரு தொலைபேசியில் தன் காதல் வேண்டுகோள்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தனது காதலன்/காதலியை எப்படி நேசிக்கிறார்கள் என்று உணர்வுப்பூர்வமாக அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
தொகுப்பாளர் அடுத்து நம்மிடையே கார்த்தி பேசப்போகிறார் என சொல்வதைக் கேட்டு அரைத்தூக்கத்திலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.இந்த கார்த்தி பெயர் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பெயர். அப்படியே அந்த வானொலி உரையாடலைக் கேட்கலானேன்.
“ஹல்லோ கார்த்தி சொல்லுங்க, உங்க காதலி பெயர் என்ன?”
“அவ பேரு ஜெனி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றாங்க”
அய்யோ என்னோட பேரைச் சொல்றான்.. இந்தக்குரல் அவனோட குரல்தானே!! எனக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
“நீங்க ஜெனிக்கு எதாவது சொல்ல விரும்பிறீங்களா?”
“யெஸ், நான் எங்க இருந்தாலும் அவளோட நினைவுகளில் தான் இருக்கேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள், அதை அவளுக்கு ஞாபகப் படுத்தத் தான் இப்போ உங்களுக்கு போன் பண்ணேன்”
கடவுளே, என்னக் கொடுமை இது, நாளைக்கு நவம்பர் 7, கார்த்தி போன வருஷம் இந்த தேதியில தான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.என் இதயத்துடிப்பு அதிகரித்தது.
“கார்த்திக்காகவும் அவரோட காதலி ஜெனிக்காகவும் இந்த அருமையான பாடல் ஒலிபரப்பப்படுகிறது” என்று வானொலித் தொகுப்பாளர் சொல்லியவுடன் “தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி” பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் ஒலித்துக் கொண்டிருக்க எனது அறை முழுவதும் கார்த்தி வழக்கமாக உபயோகப்படுத்தும் “ஃபர்ஃபியூமின்” வாசம் விரவத்தொடங்கியது.







